புதுமணப் பெண் மர்ம மரணம்... வரதட்சணைக் கொடுமையால் கொலையா என போலீசார் விசாரணை!
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் மேதினிநகரில் உள்ள ரெட்மா சௌக் பகுதியில் வசித்து வந்த வைஷ்ணவி தேவி தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவிக்கு, மேதினிநகரைச் சேர்ந்த சூரஜ் குப்தா என்பவருடன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதல் வரதட்சணை கேட்டு அவர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், இது தற்கொலை அல்ல என்றும், தங்களது மகள் வைஷ்ணவியை கணவன் கொலை செய்துவிட்டு, தற்கொலைப் போல மறைக்க முயல்வதாகவும் வைஷ்ணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மாமியார் வீட்டினர் வைஷ்ணவியின் உடலை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இறுதிச்சடங்குகள் செய்து எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை காவல் துறையினர் தலையிட்டு சோன்பத்ராவில் உள்ள வைஷ்ணவியின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை வைஷ்ணவி தனது தாயாருடன் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் இயல்பாகத்தான் பேசினார் என்று அவரது தாய்மாமன் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். இதனால் வைஷ்ணவியின் மரணத்தில் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக வைஷ்ணவியின் உடலை மீட்டுக் காவல்துறையினர் வைத்துள்ளனர். குடும்பத்தினரின் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கி, நடத்தி வருகின்றனர்.
