45 ஆட்டுகுட்டிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சோகம்... மர்ம நபர்கள் வெறிச்செயல்!
மர்ம நபர்கள் காய்ந்த வயலுக்கும், ஓலை கூடாரத்திற்கும் தீ வைத்த செயலால், ஓலை கூடாரத்தில் அடைக்கப்பட்டிருந்த 45 ஆட்டுக்குட்டிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ளது மேலப்பசலை கிராமத்தில், சமீபத்தில் நெல் அறுவடை முடிந்ததையடுத்து, வயல்களில் இயற்கை உரத்திற்காக ஆடுகளை வைத்து தொழுவங்கள் அமைக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வயலில் இதே போல் கூடாரம் அமைத்திருந்தனர். இந்த தொழுவத்தில் நடராஜன் (60), முருகன் (50) ஆகியோருக்கு சொந்தமான 300 ஆடுகள் இருந்தன. இந்நிலையில், நேற்று காலை இருவரும் மேய்ச்சலுக்காக 255 ஆடுகளை மட்டும் வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். ஒரு பனை ஓலை கூடாரத்திற்குள் 45 குட்டிகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை இருவரும் நேற்று முன் தினம் மாலை கொட்டகை வைத்திருந்த இடத்திற்கு ஓட்டிச் சென்றபோது, தொழுவத்தில் இருந்த வயலுக்கு யாரோ தீ வைத்தது தெரிந்தது. காய்ந்த வைக்கோல் மற்றும் ஆட்டுக்குட்டிகள் வைக்கப்பட்டிருந்த ஓலை கூடாரத்திலும் தீ எரிந்தது. இதில், உள்ளே இருந்த 45 ஆட்டுக குட்டிகள் கருகி இறந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தீ விபத்து தானாக நடந்ததா அல்லது சக்திவேல் மீது முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் தீ வைத்தாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 45 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!