கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடி நாட்டின் பெருமையை உயர்த்திய அவர், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் பழனிக்கு வந்து முருகப் பெருமானை மனமுருகி வழிபாடு செய்துள்ளார்.
கோவிலுக்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற முக்கிய வழிபாடான உச்சிக்கால பூஜையில் அவர் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தண்டாயுதபாணி சுவாமியை மிக பக்தியுடன் தரிசனம் செய்தார்.

மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஏராளமான விளையாட்டு ரசிகர்களும் பொதுமக்களும் கிரிக்கெட் வீரர் நடராஜனைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் சென்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது குடும்பத்தினருடன் மலையிலிருந்து கீழே இறங்கி காரில் ஏறி சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
