சைபர் பயங்கரவாத தாக்குதல் - 5 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை!
இந்திய அரசின் முக்கிய கட்டமைப்பு வலைத்தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, பீகார் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனைகளை நடத்தியுள்ளது.
நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில் புனே (மகாராஷ்டிரா), கேடா (குஜராத்), கரீம்நகர் (தெலங்கானா), கோபால்கஞ்ச் (பீகார்) மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் உள்ள முக்கிய முகவரிகளில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது குஜராத்தில் நடைபெற்ற சைபர் தாக்குதல் தொடர்பாக, 2025 ஜூன் 25-ல் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் படையால் இந்த வழக்கு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில், மத்திய அரசின் முக்கிய கணினி அமைப்புகள், தகவல் உட்கட்டமைப்புகள் மற்றும் வலைத்தளங்கள் என மொத்தம் 54 முக்கிய அமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள் மற்றும் பென் டிரைவ்கள் உள்ளிட்ட பல டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
