இன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடக்கம்!
![மாணவிகள்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/606af747d168a1b19927eab191e14bba.jpg)
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த படிப்புக்களை படிக்க நீட் தேர்வு அவசியமாகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தான் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் 40 நாட்களுக்கு முன்னதாக இந்தப் பயிற்சி தொடங்கப்படுகிறது. ஏற்கனவே நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் மாவட்ட அளவில் தேர்வு சார்ந்த பயிற்சிகள், தேர்வுகள் நடைபெற உள்ளன. திங்கள் முதல் சனிக் கிழமை வரை 6 நாட்கள் காலை 9.15 முதல் மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படும். இதற்காகத் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்த 13,304 பேர் பயிற்சி பெற உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 330 மையங்களில் பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை வழங்கப்படும். காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும். அத்துடன் சனிக்கிழமைகளில் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் 11 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திரத் தேர்வுகளும் நடத்தப்படும். மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் ஊக்கமளிப்பு அமர்வுகளும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!