நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திப் போராட்டம்... நெல்லையில் கல்லூரி மாணவர்கள் கைது!

 
நீட்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கல்லூரி மாணவர்கள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர் இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். திடீரெனச் சாலையில் அமர்ந்து மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

டெல்ல் நீட்

போராட்டம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தைக் கைவிட மறுத்து மாணவர்கள் தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனையடுத்துப் போக்குவரத்திற்கு இடையூறாகப் போராட்டம் நடத்திய மாணவர்களைக் காவல் துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் அடைத்து அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நீட்

நீட் தேர்வுக்கு எதிராகத் தென் மாவட்டங்களில் மாணவர்கள் திரண்டு நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. தங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கக் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.