நேபாளத்தில் உடல்கள் கிடைக்காத நிலையில் வைக்கோல் உருவ பொம்மைகளைக் கொண்டு இறுதிச் சடங்குகள்!
திபெத் இமயமலைப் பகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகப் போடேகோஷி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இயற்கையின் இந்தச் சீற்றத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுச் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் சிக்கிக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் இதுவரை 1,127 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 4,000 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தாலும், வெள்ளம் நிகழ்ந்து 6 நாட்கள் கடந்துவிட்டதால் மாயமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில், உடல்கள் மீட்கப்படாதவர்களின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். உடல்களுக்குப் பதிலாக வைக்கோலால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகளைப் பாடைகளில் கட்டித் தூக்கிவந்து அவர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்த நிகழ்வு காண்போரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
