தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயம் - நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தைச் சீரமைத்து இறுதி செய்யும் நோக்கில், சென்னையில் நாளை (ஆகஸ்ட் 27) 2-வது கட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆட்டோ கட்டண மாற்றம் குறித்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி முதற்கட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளும், 90 பயணியர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ₹70 ஆக உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் வலியுறுத்தின.

பொதுமக்களின் சுமையைக் குறைக்கக் குறைந்தபட்சக் கட்டணத்தை ₹50 ஆக நிர்ணயிக்க வேண்டும் எனப் பயணியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இரு தரப்பின் கருத்துக்களையும் கேட்டறிந்த போக்குவரத்துத் துறை, புதிய கட்டணம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கையைத் தயார் செய்துள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்து, புதிய ஆட்டோ கட்டண அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக நாளை 2-வது முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
