பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை... அரசியலமைப்புக்கே எதிரானது... உயர்நீதிமன்றம் அதிரடி!
பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூரைச் சேர்ந்த அருணகிரி என்பவர் தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட ஆரம்ப பள்ளியில் மதிய உணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த தனது தந்தை ராமலிங்கம் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். அந்த மனு 2015- ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் வழக்கறிஞர் பி.முரளி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கருணை அடிப்படையில் அருணகிரிக்கு வேலை வழங்க வேண்டும் என 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகும் வேலை வழங்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் முரளி தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டோம் என்றார்.
இதையடுத்து அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.