உடல் உறுப்புகள் தானம்.. விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமியின் உடலுக்கு அரசு மரியாதை..!!

புன்னைக்காயலில் நடந்த விபத்தில் உயிரிழந்த கப்பல்மாலுமியின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி புன்னைக்காயல் அருகே கடந்தமாதம் 31ம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் கப்பல்மாலுமிகளான புன்னக்காயலை சேர்ந்த அலெக்சாண்டர்(35), லசிங்டன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதேபகுதியை சேர்ந்த கப்பல்மாலுமி வசந்தன்(34) படுகாயத்துடன் மதுரையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், மீனவரான ஜோசப்(54). என்பவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுவந்தனர். இதில் வசந்தன் கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இன்று அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன், புன்னைக்காயல் புனித சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலிக்கு பின்னர் வசந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் புன்னைக்காயல் ஊர் பொதுமக்கள், வருவாய்துறையினர், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக புன்னைக்காயல் ஊர் முழுவதும் அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதிப்பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
புன்னை காயல் விபத்தில் இறந்தவர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சமும் காயமடைந்த ஜோசப்பிற்கு ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.