ஸ்தம்பித்தது பாகிஸ்தான்.. 1 லிட்டர் டீசல் ரூ.520... பெட்ரோல் ரூ.458 - இந்தியாவிற்குப் பாதிப்பு வருமா?

 
பாகிஸ்தான் பெட்ரோல் பாகிஸ்தான் பெட்ரோல்

ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு, மத்திய கிழக்கு போர்ச் சூழல் பேரிடியாக இறங்கியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு எரிபொருள் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் அமலுக்கு வந்துள்ள புதிய விலைப்பட்டியலின் படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.137 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ.458-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்குச் சுமார் ரூ.185 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ. 520 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று (நவம்பர் 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இதன் வழியாகவே நடப்பதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து முடங்கியுள்ளது. வரத்து குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டாலரைத் தாண்டியுள்ளது. பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராகத் தொடர்ந்து சரிந்து வருவதால், இறக்குமதிச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

திடீர் விலை உயர்வால் பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காய்கறிகள், பால் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் இரண்டு மடங்காகியுள்ளன. லாகூர், கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "வாழ்வதா அல்லது சாவதா?" என்பதே பாகிஸ்தான் மக்களின் இன்றைய கேள்வியாக உள்ளது.

பாகிஸ்தான் வறுமை பஞ்சம்

இந்தியாவிற்குப் பாதிப்பு வருமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், இந்திய அரசு தனது கையிருப்பைப் பயன்படுத்தி விலையை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது. எனினும், போர் நீடித்தால் இந்தியாவிலும் எரிபொருள் விலை மாற்றத்தைச் சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.