சோதனைச் சாவடி மீது வெடிபொருட்கள் ஏற்றிய வாகனம் மோதி பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் பலி... பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம்!

 
pakisthan pakisthan

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம், பனு மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெடிபொருட்கள் ஏற்றிய வாகனத்தைச் சோதனைச்சாவடி மீது மோதச் செய்து பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தைச் சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப்படையினர், அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு 'இத்தேஹாத்-உல்-முஜாஹிதீன்' (Ittehad-ul-Mujahideen) என்ற பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது. எனினும், எல்லையோரப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.