பெற்றோர்களே உஷார்.. .ஊஞ்சல் ஆடியபோது கழுத்தை இறுக்கிய கயிறு - பள்ளி மாணவி உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த சிறுமி ஒருவரின் உயிர் ஊஞ்சல் விளையாட்டில் பிரிந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், பள்ளி விடுமுறை என்பதால் தனது சித்தி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுமி சேலை அல்லது கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த உறவினர்கள், சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறையில் குழந்தைகள் வீடுகளில் விளையாடும்போது, குறிப்பாக ஊஞ்சல் மற்றும் உயரமான இடங்களில் விளையாடும்போது பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பற்ற முறையில் ஊஞ்சல் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
