3 அதிநவீன உள்நாட்டுப் போர்க்கப்பல்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி - கடற்படையில் புதிய அத்தியாயம்!
இந்தியப் பாதுகாப்புத் துறையில் 'சுயசார்பு பாரதம்' திட்டத்தின் மிக முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட மூன்று அதிநவீன கடற்படைப் போர்க்கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொல்கத்தாவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் காலை 9:15 மணியளவில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், மூன்று புதிய கப்பல்களும் இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளன.
இந்தியக் கடற்படையின் 'போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம்' வடிவமைத்து, கொல்கத்தாவின் புகழ்பெற்ற 'கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ்' நிறுவனம் இந்த மூன்று அதிநவீன கப்பல்களையும் கட்டியுள்ளது. இவற்றின் 75 சதவீதத்திற்கும் அதிகமான உதிரிபாகங்கள் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பிராஜெக்ட் 17Aதிட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஐந்தாவது அதிநவீன 'ஸ்டெல்த்' போர்க்கப்பலாகும். எதிரிகளின் ராடார் கண்களில் மண்ணைத் தூவித் தாக்கும் திறன் கொண்ட இக்கப்பலில், அதிபயங்கர 'பிரம்மோஸ்' ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடற்படையின் நான்காவது பெரிய ஆய்வுக் கப்பலான இது, ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் நீரியல் ஆய்வுகள் மேற்கொள்ளவும், கடல்சார் பாதுகாப்புத் தரவுகளைச் சேகரிக்கவும் உதவும். இதில் தானியங்கி நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் இடம் பெற்றுள்ளன.
அர்னாலா பிரிவைச் சேர்ந்த நான்காவது 'நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு' போர்க்கப்பலாகும். கடலோரப் பகுதிகளில் மறைந்திருக்கும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து, இலக்கு வைத்துத் தாக்குவதற்கென உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள், இலகுரக டார்பிடோக்கள் மற்றும் அதிநவீன சோனார் அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கொல்கத்தா ஹூக்ளி நதியில் 500 படகுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட கடல்சார் பாரம்பரியக் கலைக் காட்சியும், நாளை மாலை கொல்கத்தா வான்வெளியில் கண்கவர் மெகா துரோன் விளக்குக் காட்சியும் நடத்தக் கடற்படை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த மூன்று முக்கியத் தளங்களின் சேர்க்கை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பைப் பலமடங்கு அதிகரிக்கும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
