அம்மா போனதும், அப்பாவும் போயிட்டாங்க... காவல் நிலையத்தில் தனியாக தவித்து அழுத குழந்தைகள்... கண்ணீர் வீடியோ!
தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதி இடையே ஏற்பட்ட கடும் குடும்பத் தகராறு காரணமாக லலிதா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக எல்.எம்.டி காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் சமரசம் பேச முயன்றபோது எதிர்பாராத விதமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Telangana couple abandons 2 young daughters at Karimnagar police station during counselling over husband’s alcohol addiction & fights.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026
Wife removed her mangalsutra, both parents fled leaving the crying kids behind. Police comforted the children & handed them to grandparents. pic.twitter.com/l5jFQVZfJ0
போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த லலிதா திடீரென தனது தாலி மற்றும் மெட்டியை கழற்றி மேசை மீது வைத்துவிட்டு தனக்குக் கணவனும் வேண்டாம் பிள்ளைகளும் வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவிக்குமாரும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் காவல் நிலையத்திலேயே விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார். பெற்றோரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு சிறுமிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் காவல் நிலையம் முழுவதும் அழுது அலைந்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.
சிறுமிகளின் பரிதாப நிலையை நேரில் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் உடனடியாகக் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து ஆறுதல் கூறி பின்னர் அவர்களைப் பாட்டியிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். குடும்பப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் பெற்றோர் தங்களின் குழந்தைகளைப் பொது இடத்தில் அனாதையாக விட்டுச் சென்ற செயல் அந்தப் பகுதியில் கடும் விமர்சனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரால் கைவிடப்பட்ட இந்தச் சிறுமிகளின் நிலை சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
