விஸ்வநாதன் ஆனந்தை முந்தி, தரவரிசையில் சாதனைப் படைத்தார் பிரக்ஞானந்தா!

 
பிரக்ஞானந்தா


இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், விஸ்வநாதன் ஆனந்தை முந்தி, அதிக புள்ளிகள் பெற்று தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா முதல் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். 
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்றிரவு நடைப்பெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இதில், 62 நகர்தல்களுக்கு பிறகு டிங் லிரனை பிரக்ஞானந்தா வீழ்த்தியன் மூலமாக, இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதல்முறையாக முதல் இடத்தை பிடித்து பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

பிரக்ஞானந்தா
இந்தியாவின் செஸ் விளையாட்டின் முகமாக நீண்ட காலங்களாக நீடித்து வந்த விஸ்வநாதன் ஆனந்த், 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி ரேபிட் செஸ் சாம்பியன்ஸ் பட்டத்தை இருமுறை கைப்பற்றியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவரை இன்னொரு தமிழக வீரர் முந்தியது குறிப்பிடத்தக்கது. 

பிரக்ஞானந்தா வெற்றி


கடந்த ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்திய இளம் வீரர் குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தை விட அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்த போதும், சில நாட்களில் அடுத்தடுத்த தோல்விகளால் அவர் அதனை தக்க வைக்க முடியவில்லை. இதனால் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் முதலிடத்திற்கு திரும்பி இருந்தார். இந்நிலையில் தற்போது பிரக்ஞானந்தா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நெதர்லாந்து போட்டியில் தற்போது பிரக்ஞானந்தா இரு 2.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். நாளை நடைபெறும் 5வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் அனீஷ் கிரியை அவர் எதிர்கொள்கிறார். அனீஷ் தற்போது 3.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web