செப்டம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார்!
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகனமழை பெய்துள்ளது. இதனால் மோசமான வெள்ளப் பேரிடரை சந்தித்துள்ளது. இந்த வெள்ளப்பேரிடரில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வெள்ளம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

குறிப்பாக, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கன மழை, மற்றும் பொங், ரஞ்சித் சாகர், பாக்ரா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகப்படியான நீர் ஆகியவை இந்த பேரிடருக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனையடுத்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பஞ்சாபில் 1,400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1. 48 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கின இந்நிலையில் பஞ்சாபில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி செப்டம்பர் 9ம் தேதி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில், பிரதமர் மோடி செப்டம்பர் 9 ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தருகிறார். இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். பிரதமரின் பஞ்சாப் பயணம் பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்டம்பர் 9 ல் பஞ்சாபில் இருந்தபடி பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
