இயக்குநர் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கடிதம்!

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பாரதிராஜாவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி உருக்கமான ஆறுதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், இந்தியத் திரைத்துறையின் ஆகச்சிறந்த ஆளுமையான பாரதிராஜாவின் மறைவு, ஒட்டுமொத்த கலை உலகிற்கும் பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "திரைக்கதை அமைப்பிலும், திரைப்படங்களை இயக்கும் பாணியிலும் முத்திரை பதித்த பாரதிராஜா அவர்களின் இந்த இழப்பு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இது ஈடு செய்ய முடியாத  இழப்பாகும்" என்று பிரதமர் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த ஸ்டுடியோ செட்டிங் கலாச்சாரத்தை உடைத்து, கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமங்களுக்குச் சென்று அசல் மனிதர்களின் வாழ்வியலைப் பதிவு செய்தவர் பாரதிராஜா. இதனைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, "தமிழ் சினிமாவில் கிராமத்து வாழ்வியலையும், அதன் எளிய மனிதர்களின் உணர்வுகளையும் தத்ரூபமாகத் திரையில் சித்தரித்த பெருமை பாரதிராஜா அவர்களையே சாரும். இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், அவரது காவியப் படைப்புகளும் காலத்தைக் கடந்து என்றும் இந்திய மக்களால் நன்றியோடு நினைவுகூரப்படும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரதிராஜாவின் திடீர் மறைவால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ள தற்போதைய சூழலில், நாட்டின் பிரதமர் அனுப்பியுள்ள இந்த உருக்கமான இரங்கல் கடிதம் அவரது குடும்பத்தினருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.