நாளை பிரதமர் மோடி கேரளாவில் ரோடு ஷோ... ட்ரோன்கள் பறக்கத் தடை!

 
மோடி ரோடு ஷோ மோடி ரோடு ஷோ

கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் என்.டி.ஏ (NDA) வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் பிரதமர் மோடி நாளை கேரளா வருகிறார்.

பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பாலக்காடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாலை திருச்சூர் செல்லும் பிரதமர், அங்கு பிரம்மாண்ட 'ரோடு ஷோ' மூலம் மக்களிடையே வாக்கு சேகரிக்கிறார்.

மோடி

பிரதமர் கோவை வழியாக ஹெலிகாப்டரில் பயணிப்பதாலும், விமான நிலையம் வருவதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கோவை மாநகரக் காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது: கோவையின் அவினாசி சாலை, பீளமேடு, நீலாம்பூர், சித்ரா, எட்டிமடை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றும் (மார்ச் 28), நாளையும் (மார்ச் 29) இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளத்தைச் சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையின் போது அவினாசி சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மோடி ட்ரோன்

கேரளாவில் மார்ச் 26-ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பாலக்காடு மற்றும் திருச்சூர் தொகுதிகளில் பாஜக கடும் போட்டியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.