சிறைச்சாலையில் கைதி 'திடீர்' மரணம்... 105 கிலோ கஞ்சா வழக்கில் கைதானவர்!
பாளையங்கோட்டை சிறையில் 105 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அய்யனு. இவரது மகன் முருகானந்தம் (30). இவர் கடந்த ஆண்டு சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 105 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில் சிறை வார்டன்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே முருகானந்தம் உயிரிழந்ந்து விட்டார்.இது குறித்து பெருமாள்புரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
