திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் படுகாயம் - 3 கிமீ தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து!

 
பேருந்து

திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பயணிகள் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கித் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. பேருந்து கோவை அடுத்த சின்னியம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தின் போது பேருந்துக்குள் இருந்த பயணிகள் அனைவரும் மரண பயத்தில் அலறினர். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் பொதுமக்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துப் பயணிகளை மீட்கும் பணியில் உடனடியாக இறங்கினர்.

விபத்து

இந்த விபத்தில் 3 பயணிகள் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர ஊர்தி மூலம் அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கோவையின் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் சின்னியம்பாளையம் சாலையில் பேருந்து குறுக்காகக் கவிழ்ந்து கிடந்ததால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றன. இதன் காரணமாக, கோவை - அவினாசி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார், கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தைச் சாலையிலிருந்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்து குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.