பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்... புதிய அரசு அமைவதால் காலதாமதம்!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 8-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் முறையான அனுமதி கிடைத்த பின்னரே முடிவுகளை வெளியிட முடியும் என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முடிவுகளுக்காகக் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தேர்வு

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் புதிய அரசு பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் போன்ற முக்கிய அரசியல் மாற்றங்களே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கல்வித்துறையின் புதிய அமைச்சரின் ஒப்புதல் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பிறகே இணையதளத்தில் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தெளிவான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்முறை தேர்வு

தேர்வு முடிவுகள் தயாராக உள்ள போதிலும், நிர்வாகக் காரணங்களுக்காக அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர். புதிய அரசின் பதவியேற்பு விழா முடிந்தவுடன், முதற்கட்டமாகப் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் பதற்றமடையாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுமை காக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.