செப்.5ல் டெல்லியில் அமைதிப் பேரணி... 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அறிவிப்பு!
மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி புதுடெல்லியில் மீண்டும் இளைஞர்கள் அமைதிப் பேரணி நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 25 அன்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றபோது மத்திய அரசு சில உறுதிமொழிகளை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்குத் தீவிர விருப்பமில்லை என்று CJP அமைப்பின் அமைப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து மத்திய அரசு பின்வாங்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 5 அன்று புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி, புதுடெல்லி காவல்துறை தலைமையகம் வரை அமைதியான முறையில் நடைபெறும்.

நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரும், கடந்த ஜூலை 20-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இந்தப் பேரணிக்கு முன்னின்று தலைமை தாங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முடிவுக்கு வந்த மாணவர் போராட்டம் தற்போது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மூலம் மீண்டும் பேரணியாக உருவெடுத்துள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
