வேணாம்மா... 8-வது மாடியிலிருந்து குதித்த தாய்... கையைப் பிடித்துக் காப்பாற்றப் போராடிய குழந்தை நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே தலேகான் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தலேகான் எம்.ஐ.டி.சி பகுதியில் வசித்து வந்த பிரதிபா சங்கர் என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாகத் தெரிகிறது. ஆத்திரத்தில் அவர் பால்கனியிலிருந்து குதிக்க முயன்றபோது, அவரது பிஞ்சு குழந்தை தாயின் கையைப் பிடித்துக் கொண்டு காப்பாற்றப் போராடியது பார்ப்போரை உலுக்கியது.
नवऱ्याशी भांडण, महिलेनं थेट 8 मजल्यावरुन घेतली उडी, पुण्यातील धक्कादायक घटना | NDTV मराठी#Pune #ndtvmarathi pic.twitter.com/nq6hlDAnhP
— NDTV Marathi (@NDTVMarathi) May 10, 2026
அந்தப் பிஞ்சு குழந்தையின் பலம் தாயின் எடையைத் தாங்க முடியாத நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் பிரதிபா 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிரதிபாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், பிரதிபாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது என்றும், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
