ராகிங் பிரச்சனையால் மருத்துவ மாணவர் தற்கொலை... பெரும் பரபரப்பு!
கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவர் நித்தின் ராஜ் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் வெளியிட்ட ஒலிப்பதிவில், பேராசிரியர்கள் ராம் மற்றும் சங்கீதா ஆகியோர் தன்னை ராகிங் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். சாதி, மதம் மற்றும் வறுமை நிலையைச் சுட்டிக்காட்டி அவர்கள் இழிவுபடுத்தியதே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள ஆளுநர் உத்தரவிட்டதை அடுத்து தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேராசிரியர் ராம் கொடுத்த ராகிங் தொல்லைகளே மாணவரின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. மாணவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முதற்கட்டமாக 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாகத் தலைமறைவாக உள்ள பேராசிரியர் ராம் முறைப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகச் சக்கரக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு மருத்துவ மாணவர் பேராசிரியர்களின் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
