மிரட்டலான 'பவுனுத்தாயி'யாக ராதிகா.. குவியும் பாராட்டுக்கள் - 'தாய் கிழவி' ட்ரெய்லர் வெளியீடு!
சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' மற்றும் 'பேஸன் ஸ்டூடியோஸ்' இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ஒரு கிராமத்து மூதாட்டியின் வாழ்வியலை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான பின்னணியில் பேசுகிறது.
75 வயது மூதாட்டியான 'பவுனுத்தாயி' என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். ட்ரெய்லரில் அவரது தோற்றம், மேக்கப் மற்றும் கணீர் குரல் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பவுனுத்தாயின் கணவர் இறந்த பிறகு, அவர் சேர்த்து வைத்த சொத்துக்களைப் பிரித்துக் கேட்டு அவரது மகன்கள் நச்சரிக்கின்றனர். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் தர முடியாது எனப் பிடிவாதமாக இருக்கும் பாட்டிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவையான மோதல்களே இந்தப் படத்தின் மையக்கருவாகத் தெரிகிறது.
ராதிகாவின் மகன்களாகச் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன் மற்றும் ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'தாய் கிழவி வாரா' பாடல் ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், "நிச்சயமாக மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்" என்று படக்குழுவினரை மனதாரப் பாராட்டியிருந்தார். மேலும், படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனின் திறமையைப் பாராட்டி, தனது அடுத்த படமான 'சேயோன்' படத்தில் சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உணர்ச்சிகரமான குடும்பக் கதையுடன் கூடிய நகைச்சுவைப் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
