எகிறும் எதிர்பார்ப்பு... ‘ஜனநாயகன்’ தேர்தலுக்கு முன் ரிலீஸாகுமா? இன்று மறுஆய்வுக் குழுவினருக்கு ஸ்பெஷல் ஸ்கிரீனிங்!
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில், இந்த நேரத்தில் ஜனநாயகன் படம் வெளியானால், பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்துள்ள கடைசித் திரைப்படமாகக் கருதப்படுவதால், எதிர்பார்ப்பு இயல்பிலேயே மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'ஜனநாயகன்' படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவிய நீண்ட காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நாளை மறுஆய்வுக்குழுவின் பார்வைக்குச் செல்லவுள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனைகளால் தள்ளிப்போனது. ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை அன்று மறுஆய்வுக்குழு இந்தப் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கைக்குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அந்த ஆய்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இன்று மறுஆய்வுக்குழுவினர், ஜனநாயகன் படத்தை முழுமையாகப் பார்த்துத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் இந்தக் குழு, படத்தில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் காட்சிகள் அல்லது வசனங்களை நீக்கப் பரிந்துரைக்கலாம் அல்லது 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கிப் படத்தை வெளியிட அனுமதி அளிக்கலாம்.

இன்று தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டால், 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
