ஆருத்ரா மோசடியில் ஆர்.கே. சுரேஷ் மீது இறுகும் பிடி.. கைதாக வாய்ப்பு?

 
ஆர்.கே.சுரேஷ்

தமிழகத்தை உலுக்கியுள்ள பெரும் மோசடியான ஆருத்ரா நிதி நிறுவன மோசடி சம்பவத்தில் பாஜக பிரமுகரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட தொடங்கியது முதல் பரபரப்பு கிளம்பியது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டதால் பணம் படைத்தவர்கள் மூலம் இந்த வழக்கை ஒன்னும் இல்லாமல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி காட்ட தொடங்கியுள்ளனர்.

சென்னை அமைந்தகரையில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மாதத்திற்கு 25 முதல் 30% வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் இருந்து முதலீடாக 2,400 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முதலீடு செய்துள்ளனர். 

ஆர்.கே.சுரேஷ்

ஆனால், சொன்னபடி வட்டி பணத்தையும் வழங்காமல் முதலீடு பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளது.இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல்ராஜ் (31) அண்மையில் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக ரூசோ என்பவரும் கைதானார். அவரிடம் நடந்த விசாரணையில் நடிகரும், பைனான்சியரும், தமிழக பாஜகவின் கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷ் சிக்கினார். அதாவது டெல்லி மூலம் இந்த வழக்கை நீர்த்துப்போகசெய்ய ஆர்.கே. சுரேஷுக்கு ரூசோ 12 கோடி கொடுத்துள்ளார். 

மேலும், வாங்கிய பணத்துடன் ஆர்.கே. சுரேஷும் அப்படியே பதுங்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆர்.கே. சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் அவர் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அவர் பெயர் அடிபட்டது முதல் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.சுரேஷ்

இந்நிலையில் ஆர்.கே. சுரேஷை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதற்கு பின்னர் அவரை வலை வீசி பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். விசாரணை வளையத்துக்குள் ஆர்கே சுரேஷ் வந்தால் பல உண்மைகள் தெரிய வரும் என கூறப்படுகிறது. 

ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு முன்னாள் நடிகர் ஆர்.கே.சுரேஷின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதில் திருப்தி இல்லையென கூறிய பொருளாதார குற்றப்பிரிவு அடுத்தமுறை விசாரணைக்கு ஆர்.கே.சுரேஷ் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு இதற்கு பின்னால் யார் யார் உள்ளனர் என்ற விவரமும் வெளியாகலாம். இதில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் சிக்குவார்கள் என தகவல் பரவுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.