சத்குரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு கடந்த சில வாரங்களாகவே கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மார்ச் 17 ம் தேதி டெல்லியில் அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக சத்குரு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது . இதனையடுத்து 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி “சத்குரு உடல் நலம் தேறி வருவது மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டிருப்பதே இதற்கு காரணம். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு அனைத்தும் மீண்டும் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் “ சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!