பிரபாகரனை சீமான் பார்த்ததே கிடையாது... அந்த படம் நான் எடிட் பண்ணது... இயக்குநர் ராஜ்குமார் பரபரப்பு!

'விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. பிரபாகரனுடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்' என சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனி ஈழம் கேட்டு இலங்கையில் போரிட்ட பிரபாகரனுடன் இருப்பது போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார். இது குறித்து சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், ''சீமான் அவரை சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன்'' எனக் கூறியிருந்தார். இதனை பார்த்த அரசியல் கட்சியினர், நாம் தமிழர் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
'வெங்காயம்', 'பயாஸ்கோப்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறுகையில், “நான் கடந்த 2007-08 ம் ஆண்டு காலக்கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது சீமானுடன் இருக்கும் செங்கோட்டையன் என்பவர் ஒருநாள் ஒரு டிவிடியில் பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருப்பது போல் 10 படங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனுடன் சீமான் படத்தையும் தந்து பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல் ஒரு படத்தை தயார் செய்து தரும்படியும், அந்த படத்தை சீமானுக்கு கிப்ட் ஆக கொடுக்கப் போவதாகவும் கூறினார்.
நினைவுப்பரிசாகத் தானே கொடுக்க போகிறார்கள் என எண்ணி பிரபாகரனுடன் சீமான் கைகளை கட்டிக்கொண்டிருப்பது போல் படத்தை எடிட் செய்து சேர்த்தேன். அதைத் தான் தற்போது சீமான் பயன்படுத்தி வருகிறார். அந்த படத்தில் சீமானுக்கு ஷேடோ (நிழல்) இருப்பது போல் செய்திருப்பேன். ஆனால், பிரபாகரன் படத்திற்கு பின்னால் ஷேடோ இருக்காது. அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம். இது நான் எடிட் செய்தது என்பதால், முழுமையாக தெரியும். இதை தற்போது நான் கூறுவதற்கு காரணம் சீமான் பெரியார் பற்றி பிஜேபி எண்ணங்களை பேசி அசிங்கப்படுத்தி வருகிறார்.
அதனால் தான் அந்த படத்தின் உண்மைத் தன்மையை வெளியே கூறியிருக்கிறேன். சமூக நீதிக்காக போராடிய பெரியார் பற்றி தவறாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இப்பவும் உண்மையை சொல்லவில்லை என்றால் இப்படி பேசாமலே இருந்து விட்டோமே என்ற எண்ணம் என்னை வாட்டும். அதனால்தான் அந்த படம் நான் எடிட் செய்த படம் என்ற உண்மையை கூறியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதே சமயம், நமது உண்மை சரிபார்ப்பு பணியில், சீமான் பிரபாகரனைச் சந்தித்ததை நம்மிடம் சில முன்னால் விடுதலை புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். சீமான் பிரபாகரனைச் சந்தித்தது உண்மை தான் என்று உறுதிபடுத்தியிருக்கிறார்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து சீமானின் பேட்டி அப்போதைய ஆனந்த விகடன் பத்திரிக்கையிலும் புகைப்படங்களுடன் வெளியாகி இருக்கிறது. ஆனால், அப்போதைய சீமானின் பேட்டியை விட சில விஷயங்களை தற்போது சீமான் மிகைப்படுத்தி பேசி வருகிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!