அதிர்ச்சி... 20,000 மாத்திரைகள் பறிமுதல்... போதைபொருட்கள் விற்பனையில் முக்கிய குற்றவாளி கைது!
தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக போதைபொருட்களின் நடமாட்டம் அதிரித்து வருகிறது. போலீசார் போதைப் பொருட்களைக் கடத்துபவர்களைப் பிடித்து வந்தாலும் தமிழகத்திற்குள் போதைப் பொருட்களின் நடமாட்டமும், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வரும் போக்கும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகரி்ல், வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் அரியானா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த ஜூலை மாதம் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் ரோந்துப் பணியி்ல் ஈடுபட்டிருந்த போது, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்த துணை நடிகைகள் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரித்த போது, அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை மொத்தமாக வாங்கி, மருந்து விற்பனைக் கடைகளுக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் நடத்தி வந்த சச்சின்(43) என்பவரிடம் இருந்து வாங்கி பயன்படுத்தியும், விற்றும் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய சச்சினை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் தனிப்படை போலீஸார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ஹரியானாவில் சச்சினை பிடித்து கைது செய்தனர்.
அங்குள்ள நீதிமன்றத்தில் சச்சினை ஆஜர்படுத்தி, கோவைக்கு நேற்று செப்டம்பர் 6ம் தேதி அழைத்து வந்தனர். பின்னர், விசாரணையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சச்சினை அடைத்தனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கோவையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘முந்தைய வழக்குகளில் கைதானவர்களிடம் விசாரி்த்த போது, சச்சனிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைச்சீட்டு இல்லாமல், போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர், மாத்திரகைளை கூரியர் மூலம் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். 100 மாத்திரை கொண்ட அட்டையை ரூ.600க்கு வாங்கி அதை ரூ.3 ஆயிரத்து விற்றுள்ளார். இவரிடம் வாங்குபவர்கள் அதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்கின்றனர்.
போதை மாத்திரை புழக்கத்தை ஒழிக்க போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 158 கிலோ கஞ்சா, 2,598 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இதுவரை 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 39 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
