தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... பிளஸ்-1 மாணவியை தோட்டத்திற்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் - 8 பேர் கும்பல் வெறிச்செயல்!
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழக யார் அந்த சார் விவகாரம், தூத்துக்குடி, கோவை என்று மாவட்ட பாரபட்சமின்றி தமிழகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தனது பாட்டி வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்காக சென்றிருந்த 15 வயது ப்ளஸ் ஒன் படித்து வந்த மாணவியை 8 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். மாணவி தனியாக இருந்த சமயம் பார்த்துச் சூழ்ந்து கொண்ட 8 பேர் கொண்ட கும்பல், அவரைப் பலவந்தமாக தோட்டத்திற்குத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தனது உறவினர்களிடம் கூறி அழுததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் செயலில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலைத் தேடித் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடியவுள்ள நிலையில், மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவம் பெரும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
