தூத்துக்குடியில் அதிர்ச்சி... முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி அருகே தொழிலாளி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், முன்விரோதம் காரணமாகச் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உட்பட 3 பேரைத் தாளமுத்து நகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அடுத்துள்ள விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தனகுமார் (43) என்ற தொழிலாளியின் வீட்டின் மீது, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்: இச்சம்பவம் குறித்துச் சந்தனகுமார் அளித்த புகாரின் பேரில், தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல் துறையினரின் தீவிர விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவந்தது: சந்தனகுமாரின் மகன் விஷ்வாவிற்கும், மீளவிட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக முகிலன் தனது நண்பர்களான 2 சிறுவர்களுடன் சேர்ந்து சந்தனகுமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முகிலன் மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
