பேரதிர்ச்சி.. வாடிக்கையாளரின் காரை தாறுமாறாக ஓட்டி அப்பளம் போல் நொறுக்கிய ஓட்டல் டிரைவர்..!

 
வாடிக்கையாளரின் கார் விபத்து
 ஓட்டலுக்கு சாப்பிட வந்த வாடிக்கையாளரின் புது காரை உணவக ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டி  நொறுக்கி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போயஸ் தோட்டம் கஸ்தூரி ரங்கன் சாலை மூன்றாவது தெருவில் மஞ்சள் என்ற உணவகம் உள்ளது. நேற்று இரவு சைதாப்பேட்டையை சேர்ந்த அஜய் (32) என்பவர் இந்த ஓட்டலில் சாப்பிட காரில் வந்துள்ளார். அப்போது உணவக ஊழியர் காளிராஜ் வாடிக்கையாளர் அஜயின் புது காரை பார்க்கிங் செய்வதாக கூறிவிட்டு கதீட்ரல் சாலைக்கு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக காரை இயக்கி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி உள்ளார். இதில் கார் தடுப்பு சுவர் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது. உணவக ஊழியர் காளிராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அப்பளம் போல் நொறுக்கிய புது கார்

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த அசோக்நகர் போக்குவரத்து போலீஸார் காயமடைந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டல் ஊழியர் காளி கஸ்தூரி ரங்கன் சாலை மூன்றாவது குறுக்கு தெரு வழியாக அதிவேகமாக காரை ஓட்டி வந்து கதீட்ரல் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அப்பளம் போல் நொறுக்கிய புது கார்

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கதீட்ரல் சாலையில் வாகன நெரிசல் குறைவாக இருந்ததால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டலுக்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளரின் புது காரை ஓட்டல் ஊழியர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web