அதிர்ச்சி... தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
சென்னை மாங்காடு பகுதியில், பிறந்த பத்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காடு கீழ் ரகுநாதபுரம், ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வரும் இம்ரான் (30), ஸ்ரீதேவி (26) கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றுள்ளனர். வழக்கம் போல் தாய்ப்பால் கொடுத்து, குழந்தையை தூங்க வைக்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது கண்டு பதறினார். குழந்தை மூச்சுத் திணறி சோர்வடைந்ததால் பதறிய பெற்றோர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை சிகிச்சை அறையில் இறந்துவிட்டது என தெரிவித்தனர்.
மாங்காடு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
