அதிர்ச்சி... பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்!

 
வயிற்றில் கத்திரிக்கோல்

கேரள மாநிலத்தில், அறுவை சிகிச்சை செய்தபோது பெண்ணின் வயிற்றுக்குள் அலட்சியமாக டாக்டர்கள் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உஷாவுக்கு, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய நாளில் இருந்து வயிற்று வலி இருந்தது.

பல மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குறையவில்லை. அதே சமயத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். ஆண்டு கணக்கில் தொடர்ந்து வலி மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.

இதனால் பயந்து போன அவர் சிறுநீரக மருத்துவரை பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண்ணின் வயிற்றில் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பெண் எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்

அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர். பிறகு வயிற்றில் உள்ள கத்தரிக் கோலை எடுத்து விடலாம். இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறி அனுப்பியுள்ளனர். அதன்பிறகு நடந்த விசாரணையில், அதே மருத்துவமனையில் கடந்த 2021-ம் ஆண்டு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் அலட்சிய சிகிச்சை விஷயம் பூதாகரமானது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பவில்லை. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.

அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து துணை தலைவர் தொபியாஸ் கேட்டு கொண்டார். அதற்கு தேவையான உதவிகளை செய்வதாக வேணுகோபால் எம்.பி.யும் உறுதியளித்து உள்ளார். அரசு மருத்துவமனையின் அலட்சிய அறுவை சிகிச்சையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.