அதிர்ச்சி... நடுவழியில் இரண்டு துண்டுகளாக உடைந்த ரயில் பெட்டிகள் - பஞ்சாபில் பரபரப்பு!

 
பஞ்சாப் ரயில் பெட்டி பஞ்சாப் ரயில் பெட்டி

பஞ்சாப் மாநிலத்தில் காலை புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டிகள் நடுவழியில் திடீரென இரண்டு துண்டுகளாகப் பிரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லூதியானா ரயில் நிலையத்திலிருந்து ஜம்மு கத்ரா நோக்கிப் புறப்பட்ட சிறப்பு ரயிலில் இந்த எதிர்பாராத அதிர்ச்சி விபத்து அரங்கேறியுள்ளது. 

இன்று காலை லூதியானா ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுடன் சிறப்பு ரயில் ஒன்று ஜம்மு கத்ரா நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியது. ரயில் புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த வேளையில், இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருந்த இணைப்புப் பகுதி திடீரென நடுவழியில் முறிந்தது.

இணைப்பு உடைந்த அடுத்த சில வினாடிகளில், வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் இரண்டும் தனியாகப் பிரிந்து தண்டவாளத்தில் தனியே நின்றன. ரயில் பெட்டிகள் பிரிந்ததைத் தொடர்ந்து உடனடியாக ஓட்டுநரால் அவசரக் கால பிரேக் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை; பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களும் தவிர்க்கப்பட்டன.

இந்த விபத்து வெறும் தொழில்நுட்பக் கோளாறால் மட்டும் தான் நடந்ததா என்ற கோணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  ரயில் பெட்டிகள் பிரிந்த சமயத்தில் அந்தப் பகுதியில் ஒரு பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகக் கூறப்படும் தகவல்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விபத்து ரயிலின் இணைப்புப் பகுதியில் ஏற்பட்ட சாதாரணத் தொழில்நுட்ப முறிவால் நடந்ததா அல்லது ஏதேனும் வெடிச்சத்தத்தின் காரணமாகப் பெட்டிகள் பிரிந்தனவா என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டுப் பெட்டிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.