அதிர்ச்சி வீடியோ... நிலத் தகராறில் பெண்ணின் ஆடையைக் கிழித்து மானபங்கப்படுத்திய திமுக பிரமுகர்!
திருவண்ணாமலையில் நிலத்தைக் காலி செய்யச் சொல்லித் தம்பதியைத் தாக்கியதாகவும், பெண்ணின் ஆடையைக் கிழித்து மானபங்கப்படுத்தியதாகவும் திமுக ஒன்றிய அவைத்தலைவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி - ராஜேஸ்வரி தம்பதியருக்கும், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜெகநாதன் என்பவருக்கும் இடையே நீண்டநாட்களாக இடத்தகராறு நிலவி வந்துள்ளது.
சம்பவத்தன்று இடத்தைக் காலி செய்ய வலியுறுத்தி ஜெகநாதன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தம்பதியருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜேஸ்வரியின் ஆடையைக் கிழித்து அவருக்குப் பாலியல் தொல்லை மற்றும் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தன் மனைவியைக் காப்பாற்ற ஓடிவந்த கோவிந்தசாமியை, ஜெகநாதனும் அவரது மகனும் இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் கோவிந்தசாமியின் கை எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். காயமடைந்த கோவிந்தசாமி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
