ஒரு ரூபாய்க்கு ஷூ... திறப்புவிழா சலுகையால் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்.. திணறிய போலீசார்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு புதிய காலணிக் கடையின் திறப்பு விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு ஷூ என்று அறிவிக்கப்பட்ட அதிரடிச் சலுகை, பெரும் பரபரப்பையும் தடியடியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு அருகே புதிதாகத் திறக்கப்பட்ட காலணிக் கடை ஒன்றில், விளம்பரத்திற்காக "ஒரு ரூபாய்க்கு ஷூ" வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதால், விடியற்காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன்பு திரண்டனர். கடை திறப்பதற்கு முன்பே கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதனால் கோழிக்கோடு பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
கடை திறக்கப்பட்டதும் ஷூக்களை வாங்குவதற்காக மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். இதில் முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் பலர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசார், நிலைமை கைமீறிச் சென்றதால் லேசான தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில வாடிக்கையாளர்கள் போலீசாருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டதாலும் அந்த ஒரு ரூபாய் ஷூ சலுகையைத் தற்காலிகமாக நிறுத்தப் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியதற்காகக் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
