பயங்கரம்.... விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு... நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்!

 
விருந்து விருந்து

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் ஓட்டலில் வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழா மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் டிரம்பை உடனடியாக பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். ஓட்டலின் விருந்தினர் மாளிகைக்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அலறியடித்துக் கொண்டு மேஜைகளுக்கு அடியில் பதுங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய சேவை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.