அட... தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையை நெய்த கலைஞர்... சாதனை!

 
பட்டுச் சேலை

தெலுங்கானா மாநிலத்தின் சிரஸ்ஸிலா என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லா விஜய் குமார். கைத்தறி நெசவுத் தொழிலாளியான இவர் தனது அபாரத் திறமையால் ஏற்கனவே ‘கலாரத்னா’ விருதைப் பெற்றுள்ளார். இவர் வெறும் நூலிழைகளை மட்டும் பின்னாமல், தனது அசைக்க முடியாத பக்தியையும், தலைமுறை தாண்டிய எளிய பாரம்பரியத்தையும் இணைத்து ஒரு புதிய பட்டுச் சேலையைத் தறியில் நெய்து சாதனை படைத்துள்ளார்.

அளவிட முடியாத திறமையுடன் 5.5 மீட்டர் நீளமும், 48 அங்குல அகலமும் கொண்ட ஒரு பட்டுச் சேலையை ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் இவர் உருவாக்கியுள்ளார். வெறும் 200 கிராம் எடையுள்ள அந்தப் பட்டுப் புடவை, இக்கத் எனும் பாரம்பரியக் கலைநயத்துடன் மிக நுணுக்கமாக நெய்யப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினரோடு சேர்ந்து ஒரு வாரம் முழுவதும் அவர் அந்தத் தறியில் எளிய முறையில் அமர்ந்து உழைத்து இதனை உருவாக்கியுள்ளார்.

ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோயிலின் தேவி பிரமராம்பாவிற்கு இந்தச் சேலையை அவர் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் பொத்துகுண்டா ரமேஷ் நாயுடு மற்றும் அறங்காவலர் கோடே கந்திவர்தினி ஆகியோர் முன்னிலையில் இந்த  நிகழ்வு அரங்கேறியுள்ளது. கைத்தறி என்பது வெறும் தொழில் அல்ல, அது நம் பாரதத்தின் கலாச்சார அடையாளம் எனப் பாராட்டி இந்த எளிய விபரம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.