16 வயது வரை இணையதளம் பயன்படுத்த தடை... !
இன்றைய இணைய உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் நேரத்தை அதிகளவில் செலவிட்டு மூழ்கிக்கிடக்கின்றனர். இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக உலகளவில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஆன்லைன் மூலமாக சிறுவர்களுக்கு பல்வேறு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்து அரசிடம் அந்நாட்டு பெற்றோர்கள் தங்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதித்துள்ளன. இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ஒரு முக்கியமான முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட உள்ளது. தங்களின் நாட்டு சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலும் அவற்றை எதிர்க்க அரசு தயங்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
