ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரத்தில் உடனே கைது; தவெக ஐ.டி. பிரிவு விளக்கம்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் விவகாரம், தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரப்பூர்வ விளக்கமளித்துப் பதிலடி கொடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் பாலியல் சீண்டல் சம்பவத்தில் கைதான நபருக்கும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அவர்கள் விமர்சித்திருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐ.டி. பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், இந்த அரசு பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த உடனே சட்டம் தனது கடமையை மிகத் துரிதமாகச் செய்துள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே இயலாது என்றும் தவெக ஐ.டி. பிரிவு மிக உறுதியாகத் தெரிவித்துள்ளது.