சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியது`யாகி' புயல்... இயல்பு வாழ்க்கை முடங்கியது!
சீனாவை தொடர்ந்து யாகி புயல் வியட்நாமை தாக்கியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.பிலிப்பைன்சில் உருவான யாகி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை பெய்து வந்த நிலையில், யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு 14 பேர் பலியாகினர். இதனையடுத்து அந்த புயல் சீனாவை நோக்கி நகர்ந்தது. தென்கிழக்கு மாகாணமான ஹைனான் தீவு அருகே கரையை கடந்த யாகி புயலால் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக அங்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 8 லட்சம் பேர் இருளில் மூழ்கினர். மேலும் இந்த புயலுக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்தனர். 92 பேர் படுகாயம் அடைந்து யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்நிலையில் யாகி புயல் தற்போது வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. அங்குள்ள குவாங் நின் நகரில் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியட்நாமில் தலைநகர் ஹனோய் உள்பட 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு திட்டமிட்டபடி செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
