வகுப்பறையில் 5 வயது சிறுவனை 12 நிமிடங்களுக்கும் மேலாகக் கொடூரமாகத் தாக்கிய மாணவி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
12

 

ஏஎல்எஸ் அகாடமியில் பயிலும் நர்சரி வகுப்பு 5 வயது சிறுவன் ஒருவனை அவனது வகுப்பறைத் தலைவியான ஒரு சிறுமி 12 நிமிடங்களுக்கும் மேலாகக் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுவனின் முகம் மற்றும் கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிஜேந்திர குமார் என்பவரின் 5 வயது மகன் கிருதய் புதன்கிழமை அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது முகம் முழுவதும் வீங்கிப் போய் அழுதுகொண்டே இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து பள்ளிக்கு விரைந்துள்ளனர்.

வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த மூடிய சுற்றுத் தொலைக்காட்சி கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பெற்றோர் வற்புறுத்திப் பார்த்தபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த வீடியோவில் வகுப்பறைத் தலைவியாக இருக்கும் சிறுமி 5 வயது சிறுவன் கிருதயை இடைவிடாமல் கன்னத்தில் அறைந்தும் குத்தியும் கொடூரமாகத் தாக்குவதும் அவனது முடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் துன்புறுத்துவதும் பதிவாகியிருந்தது. இந்தக் கொடூரத் தாக்குதல் 12 நிமிடங்கள் வரை நீடித்த போதிலும் அந்த வகுப்பறைக்கு எந்தவொரு ஆசிரியரோ அல்லது பள்ளி ஊழியர்களோ வந்து தடுக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வியாழக்கிழமை அன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தியது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவி உடனடியாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.