திடீர் விஐபி... முன்பதிவு இருக்கையை மாற்றி அலட்சியம்... ரூ.48,000 இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு!

 
ஏர் இந்தியா விமானம்
திடீரென தங்களது விமானத்தில் விஐபி ஒருவர் பயணம் செய்வதாக தகவல் தெரிய வந்ததையடுத்து, ஏற்கெனவே அதிக டிக்கெட் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்திருந்த வயதான தம்பதியரின் டிக்கெட்டுகளை  மாற்றிக் கொடுத்து, இது குறித்து அவர்கள் கேள்வியெழுப்பிய போது அவர்களை அலட்சியப்படுத்திய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, தம்பதியருக்கு இழப்பீடாக ரூ.48,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'ஏர் இந்தியா' விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் மேற்கூரையில் இருந்து நீர் சொட்டுச்சொட்டாக இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது பெரும் சர்ச்சையாக மாறியது.

அடுத்து, கடந்த ஜனவரி 17 ம் தேதியன்று, பனிமூட்டத்தில் விமானங்களுக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  அந்த வரிசையில் தற்போது, வயதான தம்பதியரின் டிக்கெட்டை மாற்றிய 'ஏர் இந்தியா' நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்

சண்டிகரைச் சேர்ந்த வயதான தம்பதிகளான சுனில் பார்ட்டி, அவரது மனைவி கூசும் ஆகியோர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 6 ம் தேதி டெல்லியிலிருந்து வான்கூவர் செல்லும் விமானத்தில் செல்வதற்காக இரண்டு இருக்கைகளை (41C மற்றும் 41A) கூடுதல் லெக்ரூமுடன் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக கூடுதலாக சுமார் ரூ.18,000 செலுத்தி அவர்கள் இருக்கையைத் தேர்வு செய்துள்ளனர். 

விமானம் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் இந்தக் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 22 அன்று, டெல்லியில் அவர்கள் விமானத்தில் ஏறியபோது, அந்த இரண்டு பயணிகளுக்கும் வெவ்வேறு இருக்கைகள் (32E மற்றும் 32D) வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து விமானப் பணியாளர்களிடம் விசாரித்தபோது,​​ அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை என்றும், அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. விமானப் பணியாளர்கள் அந்தத் தம்பதியினரிடம், 'இப்போது ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உட்காருங்கள் அல்லது போர்டிங்கை விட்டு வெளியேறுங்கள்' எனக் கூறியதாகத் தெரிகிறது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

அதற்குக் காரணம், வயதான தம்பதியினர் புக் செய்திருந்த அந்த இருக்கைகளை, விமான நிறுவனம் சில விஐபிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. கூடுதல் கட்டணமும் பெற்றுக்கொண்டு, சீட்டையும் ஒதுக்காததால் மிகவும் வருத்தமுற்ற அந்தத் தம்பதியினர், சண்டிகரில் உள்ள நிரந்தர லோக் அதாலத் (பொதுப் பயன்பாட்டுச் சேவைகள்) மையத்தில் தங்களது நடந்த அசெளகரியங்கள் குறித்து புகார் கூறி வழக்கு தொடுத்தனர்.

இதற்கு 'ஏர் இந்தியா' நிறுவனம் சார்பில், 'வயதானவர்கள் என்பதால், அவர்களுடைய உடல்நலத்தில் அக்கறை கொண்டு, எமர்ஜென்சி கதவிற்கு அருகே சீட் மறுக்கப்பட்டது. மற்றபடி இதற்கு வேறு காரணம் இல்லை' என பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நிரந்தர லோக் அதாலத் மையம், ஏர் இந்தியா நிறுவனம் அந்த தம்பதிக்கு இழப்பீடு வழங்குமாறு நேற்று உத்தரவிட்டது. 'குறிப்பிட்ட இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முன்பே, பயணிகளின் உடற்தகுதியைக் கருத்தில் கொள்ள வேண்டியது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும். 

இந்த விவகாரத்தில்  தம்பதியினருக்கு அசெளகர்யத்தைத் தந்த காரணத்தால் விமான நிறுவனம் அந்த தம்பதிகளுக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம் மற்றும் இழப்பீடு ரூ.30 ஆயிரம் என மொத்தமாக ரூ.48,000 செலுத்த வேண்டும்’ என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web