என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பம் தொடக்கம்!
தமிழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துணை கலந்தாய்வுக்கான தேதிகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுவரை நடந்த சிறப்புப் பிரிவு மற்றும் முதற்கட்டக் கலந்தாய்வில் 28,979 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுச் சேர்க்கை பெற்றுள்ளனர்.
பி.ஆர்க் படிப்புகளுக்குப் பொதுப் பிரிவில் 622 பேருக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு ஒதுக்கீட்டில் 40 பேருக்கும் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் இதுவரை 60,508 ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன (அதில் 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது). 2-ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 17 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வு தொடங்கும்.

பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இதுவரை பொதுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறும்.
மாணவர்கள் கலந்தாய்வு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான சந்தேகங்களுக்குத் தமிழகம் முழுவதும் உள்ள 110 TNEA சேவை மையங்களை அணுகலாம். இணையதளம்: www.tneaonline.org. இலவச உதவி எண்: 1800-425-0110 (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை). மின்னஞ்சல் முகவரி: tneacare@gmail.com
