அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்... வரும் கல்வியாண்டில் 3,00,167 மாணவர்கள் சேர்ப்பு!

 
அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. வரும் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை 3 லட்சத்தைக் கடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் அடுத்து வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இன்னும் அட்மிஷன் துவங்காத நிலையில், இந்த வருடம் மாணவர் சேர்க்கை குறித்து அரசு பள்ளிகளும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் எதிரொலியாக வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.  

மாணவர்கள்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை,  மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5  சதவீத இட ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

மாணவிகள் அரசு பள்ளி

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

அந்த வகையில் கடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை அரசு பள்ளிகளில்  3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29 சதவீத மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   வருகிற 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 4 லட்சத்தை எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web