உலகை வென்ற தமிழக மகள்... ஆசிய செஸ் சாம்பியன் சவிதா ஸ்ரீக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

 
செஸ்  சவிதா ஸ்ரீ செஸ்  சவிதா ஸ்ரீ

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய மகளிர் தனிநபர் செஸ் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள சென்னையைச் சேர்ந்த வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

21-வது ஆசிய மகளிர் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அண்மையில் மங்கோலியாவில் அரங்கேறியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்தச் சர்வதேசத் தொடரில், இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் சர்வதேச மாஸ்டர் சவிதா ஸ்ரீ பாஸ்கர் களம் கண்டார்.

சதுரங்கம் முதலீடு செஸ்

ஆரம்பம் முதலே எதிரணிகளின் வியூகங்களை அசுரத்தனமான ஆட்டத்தால் தவிடுபொடியாக்கிய சவிதா ஸ்ரீ, 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஆசிய செஸ் தொடரில் தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தி 'ஆசிய சாம்பியன்' என்ற வரலாற்று மகுடத்தைச் சூடி சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மிக உயரிய 'பிடே' மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் விளையாடுவதற்கான நேரடித் தகுதியையும் சவிதா ஸ்ரீ தட்டிச் சென்றுள்ளார். இவரது இந்தச் சாதனை இந்திய மற்றும் தமிழக விளையாட்டுத் துறையில் பெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

செஸ்

ஆசிய அரங்கில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீயின் சாதனையைப் பாராட்டித் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆசிய மகளிர் தனிநபர் செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, உலகக் கோப்பைத் தொடருக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையின் மகள் சவிதா ஸ்ரீக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உலக அரங்கில் தமிழர்களின் அறிவுத் திறனைத் தனது செஸ் கட்டங்கள் மூலம் நிலைநிறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் சாதனை படைக்கும் நமது மண்ணின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, நமது அரசு எப்போதும் அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்கும்" என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.