வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ... நாளை புயலாக மாற வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று அக்டோபர் 22ம் தேதி காலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது நாளை அக்டோபர் 23ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் அக்டோபர் 25ம் தேதி அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு கத்தார் நாடு டானா எனப் பெயரிட்டுள்ளது. இந்த டானா புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. புயல் உருவாகி தமிழ்நாடு கடற்பகுதிகளை விட்டு விலகி வடமேற்கு திசையில் ஓடிசா மேற்குவங்கம் நோக்கி நகர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
